செய்திகள்
திருச்சி அருகே லாரி மோதி முதியவர் பலி
திருச்சி அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி கே.கே.நகர் அருகில் உள்ள நாகப்பா நகரை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 70). இவர் தனது 10 வயது பேரன் மார்ஷல் என்பவருடன் திருச்சியில் இருந்து லால்குடி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கிறிஸ்டோபர் வாகனத்தை ஓட்ட மார்ஷல் பின்னால் உட்கார்ந்து இருந்தான். திருச்சி காவிரி பாலத்தில் அவர்கள் சென்ற போது பின்னால் வேகமாக வந்த ஒரு லாரி இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே கிறிஸ்டோபர் பரிதாபமாக இறந்தார். சிறுவன் மார்ஷல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாமக்கல் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த லாரி டிரைவர் தர்மராஜ் (39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.