உள்ளூர் செய்திகள்
கொள்ளை நடந்த வீடு.

புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் நகை கொள்ளை

Published On 2022-01-17 09:42 GMT   |   Update On 2022-01-17 09:42 GMT
புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:

தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவர் காலாப்பட்டு மத்திய பல்கலைகழகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.  பணிக்கு செல்ல வசதியாக இவர் கடந்த சில ஆண்டுகளாக புதுவை அருகே கோட்டக்குப்பம் ஜமித் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

பொங்கல் பண்டிகையையொட்டி சிவராமகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அங்கு பாங்கல் பண்டிகை கொண்டாடி விட்டு கோட்டக்குப்பம் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டை பூட்டி சென்றதை நோட்டமிட்டு வீட்டின் கதவை திறந்து நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.

இதுகுறித்து சிவராமகிருஷ்ணன் கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.

பொதுமக்கள் எந்நேரமும் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News