வழிபாடு
சிறப்பு அலங்காரத்தில் காரைவாய்க்கால் மாரியம்மன், குண்டம் இறங்க காத்திருந்த பக்தர்கள்.

காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் தீ மிதித்த திரளான பக்தர்கள்

Published On 2022-03-30 04:26 GMT   |   Update On 2022-03-30 04:26 GMT
ஈரோடு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் அதன் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களின் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19-ந் தேதி இரவு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்பட்டன.

திருவிழாவையொட்டி தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர், பால் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள். மேலும், பக்தர்கள் அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம், பால் குடம், தீச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

இந்தநிலையில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலையில் குண்டம் விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவில் குண்டத்தில் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டம் இறங்குவதற்காக பக்தர்கள் பலர் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளில் வரிசையாக காத்திருந்தனர்.

நேற்று அதிகாலையில் பக்தர்கள் இறங்குவதற்காக குண்டம் தயாரானது. இதையடுத்து கோவிலின் தலைமை பூசாரி சிறப்பு பூஜை செய்து குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவிலின் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கினார்கள். இதில் இளம் பெண்கள், பெண்கள், ஆண்கள், சிறுவர்-சிறுமிகள் உள்ளிட்டோர் பயபக்தியுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சில பக்தர்கள் தங்களது குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினார்கள். குண்டம் இறங்கும்போது மூதாட்டி ஒருவர் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் அவரை மீட்டனர். விழாவையொட்டி காரை வாய்க்கால் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பொங்கல் விழாவும், சின்ன மாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் பெரிய மாரியம்மனின் வீதிஉலா நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி இரவு 8 மணிக்கு மலர் பல்லக்கில் காரை வாய்க்கால் மாரியம்மன் வீதி உலாவும், இரவு 9.30 மணிக்கு மலர் பல்லக்கில் சின்ன மாரியம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளன.

விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா 2-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. அப்போது பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நடப்பட்டு இருந்த கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். 3-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கும் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News