செய்திகள்
காஞ்சீபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேர் கைது
காஞ்சீபுரம் அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர், வடமங்கலம், சுங்குவார் சத்திரம் அடுத்த கீழ்பொடவூர் போன்ற இடங்களில் மர்மநபர்கள் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின்பேரில் ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் மேற்பார்வையில், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசாரின் சோதனையில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30), வடமங்கலம் பகுதியை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் (32), சுங்குவார்சத்திரம் அடுத்த கீழ்பொடவூர் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் (35) ஆகியோர் திருட்டுத்தனமாக மது விற்றது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 347 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.