செய்திகள்
கமல்நாத்

ம.பி. இடைத்தேர்தல் பிரசாரத்தில் பெண் மந்திரியை தரக்குறைவாக விமர்சித்த கமல்நாத் வருத்தம் தெரிவித்தார்

Published On 2020-10-20 23:22 GMT   |   Update On 2020-10-20 23:22 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, பெண் மந்திரியை தரக்குறைவாக விமர்சித்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் வருத்தம் தெரிவித்தார்.
போபால்:

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அவருக்கு எதிராக ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி உயர்த்தியதின் விளைவு இது ஆகும். அதைத் தொடர்ந்து அங்கு சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பா.ஜ.க. அரசு உதயமானது.

ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி, அவருடன் பா.ஜ.க.வுக்கு தாவினர்.

தற்போது அந்த மாநில சட்டசபையில் காலியாக உள்ள 28 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல், அங்கு முதல்-மந்திரியாக உள்ள சிவராஜ்சிங் சவுகான், பெரும்பான்மை பலம் பெற அக்னி பரீட்சையாக அமைந்துள்ளது.

இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் ஒன்று, குவாலியர் மாவட்டத்தில் உள்ள டாப்ரா. அங்கு காங்கிரசில் இருந்து பா.ஜ.க.வுக்கு தாவி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரியாகி உள்ள இமர்தி தேவி போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அங்கு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் கலந்துகொண்டு பேசினார். அவர் அங்கு போட்டியிடுகிற காங்கிரஸ் வேட்பாளர் எளிமையானவர் என கூறியதுடன், பா.ஜ.க. வேட்பாளரான பெண் மந்திரி இமர்தி தேவியை தரக்குறைவாக விமர்சித்தார். இது அங்கு பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அவருடைய செயலை கண்டித்து முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், நேற்று முன்தினம் மவுன விரதம் இருந்ததுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வலியுறுத்தி கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கமல்நாத், போபாலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், பெண் மந்திரி இமர்தி தேவியை தரக்குறைவாக விமர்சித்ததற்கு வருத்தம் தெரிவித்தார். “நான் அவமரியாதையாக எதையும் கூறிவிடவில்லை. நான் பெண்களை மதிப்பவன். நான் பேசியது அவமரியாதையானது என யாரேனும் கருதினால், நான் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

மேலும், “இடைத்தேர்தலில் மோசமான இழப்பை சந்திக்கப்போவதை உணர்ந்து, உண்மையான பிரச்சினைகளில் இருந்து பா.ஜ.க. கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. அவர்கள் வெற்றி பெற விட மாட்டேன்” எனவும் கூறினார்.

இந்த பிரச்சினையில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானுக்கு கமல்நாத் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

நான் அவமரியாதையாக எதையும் கூறவில்லை. ஆனால் நீங்கள் பொய்களை கூறினீர்கள். நான் கூறிய வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. உங்கள் கட்சி பொய்களை சொல்கிறது. அந்த வார்த்தைக்கு தன்னிச்சையாக அர்த்தம் கற்பித்து தவறாக வழிநடத்துகிறது.

உங்கள் 15 ஆண்டு கால ஆட்சியில் இந்த மாநிலம் கற்பழிப்பு வழக்குகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதல் இடம் வகித்தது. ஆனால் நீங்கள் வாய்மூடி மவுனமாக இருந்தீர்கள்.

சமீபத்தில் மத்திய மந்திரி ஒருவரும், உங்கள் சக மந்திரி ஒருவரும் பெண்களுக்கு எதிராக தவறான வார்த்தையை கூறினார்கள். இதுபற்றி நீங்கள் உங்கள் கட்சி தலைவருக்கு கடிதம் எழுதி இருக்க வேண்டும். மவுன விரதமும் இருந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கமல்நாத்தின் தரக்குறைவான விமர்சனத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கவில்லை.

இதையொட்டி, கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், “பெண்களை யாரும் அவமரியாதையாக நடத்த முடியாது. கமல்நாத் எங்கள் கட்சிக்காரர். ஆனால் அவர் பயன்படுத்திய அந்த வார்த்தை, தனிப்பட்ட முறையில் எனக்கு பிடிக்கவில்லை. நான் அதை பாராட்ட முடியாது. அது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறினார்.

Tags:    

Similar News