செய்திகள்
ராம்குமார்

ராம்குமார் வழக்கில் புதிய திருப்பம்- சிறைத்துறை மருத்துவர் சான்றால் பரபரப்பு

Published On 2021-11-23 16:13 GMT   |   Update On 2021-11-23 16:13 GMT
ராம்குமார் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை கைது செய்தனர்.

 அப்போது அவர், கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால், ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து, அப்போதைய புழல் ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரைக்கண்ணன், துணை ஜெயிலர் உதயகுமார், உதவி ஜெயிலர் பிச்சாண்டி, தலைமை வார்டன் சங்கர்ராஜ், முதல் நிலை வார்டன் ராம்ராஜ் உள்ளிட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்போது, சிறைத்துறை மருத்துவர் சான்று ஆவணத்தை சமர்ப்பித்தார்.

ஏற்கனவே, ராம்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக அரசு தரப்பு மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ராம்குமார் சிறையிலேயே இறந்துவிட்டதாக சிறைத்துறை மருத்துவரின் சான்று ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

Similar News