செய்திகள்
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்த ஜனாதிபதி ஒப்புதல்
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்த வகை செய்யும் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
அசாம் மாநிலத்தின் கவுகாத்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் பதிவான வழக்குகளில், 1000 வழக்குகள் 50 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மேலும் 25 ஆண்டுகளாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை அந்தந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் விரைவில் முடிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கையை 30-இல் இருந்து 33 ஆக அதிகரிக்கக் கோரும் மசோதா பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்ற அனுமதிக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதி நீங்கலாக 33 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கையை 33 ஆக உயர்த்த வகை செய்யும் சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார்.