ஆன்மிகம்
எட்டாம் கொடையையொட்டி, பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்ட போது எடுத்த படம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா

Published On 2021-03-17 06:10 GMT   |   Update On 2021-03-17 06:10 GMT
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.

அதைத்தொடர்ந்து எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதற்காக காலை நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, பூமாலை சடங்கு, வில்லுப்பாட்டு, உச்சிகால பூஜை, பஜனை, தீபாராதனை ஆகியவை நடந்தது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்்கள் கடலில் குளித்து விட்டு, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

இதையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மண்டைக்காடுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இன்று (புதன்கிழமை) மீன பரணி கொடை விழா நடக்கிறது. விழாவில் அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, பூமாலை, குத்தியோட்டம், பஜனை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகா பூஜையும் நடக்கிறது.
Tags:    

Similar News