செய்திகள்
ஷர்துல் தாகூர், ரிஷப் பண்ட்

2வது இன்னிங்சில் 466 ரன்கள் குவிப்பு- இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்தது இந்தியா

Published On 2021-09-05 15:41 GMT   |   Update On 2021-09-05 17:24 GMT
ஓவல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று உணவு இடைவேளைக்கு பிறகு ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஓவல்:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்திருந்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 127 ரன்களும், புஜாரா 61 ரன்களும் விளாசினர். கேப்டன் வீராட் கோலி 22 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. ஜடேஜா 17 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரகானே ரன் எதுவும் எடுக்காமலும் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 44 ரன்களில் வெளியேறினார். உணவு இடைவேளையின்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்ட ஷர்துல் தாகூர் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ரிஷப் பண்ட் 50 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பும்ரா (24), உமேஷ் யாதவ் (25) ஆகியோரும் தங்கள் பங்களிப்பை வழங்க, இந்திய அணி 2வது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்தைவிட 367 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றது.

368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி 2வது இன்னிங்சை விளையாடுகிறது. இன்றைய ஆட்ட நேரம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் இருந்தால், போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. 
Tags:    

Similar News