செய்திகள்
உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்
உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி இன்று ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
புதுடெல்லி:
உத்தரகாண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மழை மற்றும் வெள்ள பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி முதல் மந்திரி புஷ்கர் சிங்கிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் உறுதியளித்தார்.
இந்நிலையில், உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தது அறிந்து வேதனைப்படுகிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிப்பு அடைந்தவர்களுக்கு உதவ மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...திருவனந்தபுரம், பாலக்காடு உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்