செய்திகள்
8 மணி நேரத்துக்கு பின் ஜாமீன் பெற்றார் மத்திய மந்திரி நாராயண் ரானே
முதல் மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய மந்திரி நாராயண் ரானே கைது செய்யப்பட்டார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி நாராயண் ரானே, மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் எனப் பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.க. மற்றும் சிவசேனா கட்சியினர் இடையே பல இடங்களில் நேற்று மோதல் வெடித்தது.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக், புனே காவல் நிலையங்களில் சிவசேனா அளித்த புகாரின் அடிப்படையில் அவர்மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, மத்திய மந்திரி நாரயண் ரானேவை நாசிக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு நேற்று இரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன் ராணேவை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின் ரானேவுக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.