ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம், நுழைவு வாசல் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் காட்சி.

ராமேசுவரம், திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா

Published On 2021-03-10 08:51 GMT   |   Update On 2021-03-10 08:51 GMT
ராமேசுவரம், திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட சிவன் கோவில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 6 கால சிறப்பு பூஜை நடைபெறுகின்றது.
மகா சிவராத்திரி விழா நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்கள் அன்றைய தினம் இரவு முழுவதும் திறந்து இருப்பதோடு 6 கால பூஜைகள், தீபராதனை சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரியான நாளை காலை 4.30 மணி அளவில் கோவில் நடைதிறக்கப்படும். பின்னர் வழக்கமாக பகல் 1 மணி மற்றும் இரவு 8 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.

சிவராத்திரியை முன்னிட்டு பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடைதிறக்கப்பட்டு இருக்கும். அதுபோல் நாளை இரவு 8 மணியிலிருந்து அதிகாலை வரையிலும் மகா சிவராத்திரி 6 கால சிறப்பு பூைஜ நடைபெறும். இந்த அபிஷேகத்தின்போது கருவறையில் உள்ள ராமநாதசுவாமிக்கு பால், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெறும். இதனால் ராமேசுவரம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து கோவிலிலேயே தங்கி இருந்து பக்தி பாடல்களை பாடியபடி சாமியை தரிசனம் செய்வார்கள்.

திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களேஸ்வரி சமேத மங்களநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அன்றைய தினம் முழுவதும் கோவில் நடை திறந்து இருப்பதோடு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 6 கால பூஜைகள் நடைபெறும். மேலும் பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் சுவாமிக்கு செய்யப்படும். மேலும் அம்மன் சன்னதியில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் இரவு விடிய, விடிய நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகின்றனர்.

ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகள் நடைபெறுவதோடு, அன்றைய தினம் இரவு முழுவதும் கோவில் திறந்திருக்கும்.

திருவாடானை சவுபாக்கிய நாயகி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 6 கால பூஜைகள் நடைபெறுவதோடு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீப ஆராதனைகள் நடைபெறும். கோவில் இரவு முழுவதும் திறந்திருக்கும்.

நயினார்கோவிலில் உள்ள சவுந்தர்ய நாயகி சமேத நாகநாதசுவாமி கோவிலிலும் 6 கால பூஜைகள் நடைபெறுவதால் கோவில் இரவு முழுவதும் திறந்திருக்கும். இரவு புராதன நாடக நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் சுவாமியை தரிசிக்க பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் இரவு கோவிலில் தங்கி நாடகத்தை பார்த்து விட்டு அதிகாலையில் கோவில் தெப்பத்தில் குளித்து மீண்டும் சாமியை தரிசனம் செய்வார்கள்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடக்கிறது.
Tags:    

Similar News