செய்திகள்
10 நாளில் முடிவுக்கு வந்தது மாநிலங்களவை கூட்டத்தொடர்
அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெற வேண்டிய மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே 10 நாட்களில் முடிந்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அக்டோபர் 1ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரு சபைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை இன்றி சபைகள் இயங்கின. உறுப்பினர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்க வசதியாக, இரு அவைகளும் ஒங்கிணைக்கப்பட்டன. கொரோனா கால விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.
ஆனால், 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்தால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டது. இன்றுடன் கூட்டத்தொடரை காலவரம்பின்றி ஒத்திவைக்க பரிந்துரை செய்தது. அதன்படி மாநிலங்களவையில் இன்று முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதும் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. இதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறவிருந்த கூட்டத்தொடர் 10 நாட்களில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.