உள்ளூர் செய்திகள்
கொலை

சிறுமுகை அருகே டாஸ்மாக் பாரில் மோதல்- தொழிலாளி கொலை

Published On 2022-05-06 07:06 GMT   |   Update On 2022-05-06 07:06 GMT
சிறுமுகை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள தாலத்துறையை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 35). கூலித் தொழிலாளி. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் 2 கால்களும் உடைந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று மதியம் 3 மணியளவில் ரமேஷ்குமார் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், ஜெயராஜ், சுப்பிரமணி, சுரேந்திரன் ஆகியோருடன் நெல்லிக்குப்பம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் இவர்களுக்கு உணவு பொருட்களை சப்ளை செய்தார்.

போதை தலைக்கேறிய நிலையில் ரமேஷ்குமார் பார் சப்ளையரிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், ரமேஷின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் நிலைதடுமாறி அவர் நிலைதடுமாறி மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த பார் மேலாளர் உடனடியாக ரமேசை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் ரமேஷ்குமார் வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார்.

இரவு 9 மணியளவில் அவரை அவரது தாய் எழுப்பினார். ஆனால் ரமேஷ்குமார் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவரை அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிறுமுகை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கொலை செய்த பார் சப்ளையர் மணிகண்டனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News