பொள்ளாச்சி அருகே துணிக்கடை ஷட்டரை உடைத்து பணம்- 20 வேட்டி கொள்ளை
கோவை:
பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் சமத்தூரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 46). இவர் அதே பகுதியில் துணிகடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் கடையில் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல கடையை திறப்பதற்கு வந்தார். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாபெட்டியில் இருந்த பணம் ரூ.1200 மற்றும் 20 வேட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாலமுருகன் கோட்டூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.