ஆன்மிகம்
பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் தொடங்கியது

Published On 2021-02-23 06:59 GMT   |   Update On 2021-02-23 06:59 GMT
திருவானைக்காவல்-ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேவரி கோவிலில் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும்.

அதேபோல, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சுவாமி, அம்மன், விநாயகர், சோமாஸ் கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் நேற்று காலை 6.40 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மீன லக்னத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவினைதொடர்ந்து வருகிற 11-ந் தேதி எட்டுத்திக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை தேருக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. அன்றிரவு சோமாஸ் கந்தர் புறப்பாடும், 2-ம் நாள் சூரியபிரபை வாகனத்திலும், சந்திரபிரபை வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 4-ம் நாள் கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 5-ம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் அடுத்த மாதம்(மார்ச்) 16-ந் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து 17-ந்தேதி வெள்ளி மஞ்சத்திலும், 18-ந்தேதி வெள்ளி குதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 19-ந் தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

20-ந்தேதி காலை நடராஜர் ஊடல் உற்சவம், நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது. மாலை ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். அதனைத்தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது.

மார்ச் 30-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.

ஏப்ரல் 1-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News