செய்திகள்
சசிகலா- பிரேமலதா

சசிகலாவுக்கு திடீர் ஆதரவு: அதிக இடங்களை குறிவைத்து காய் நகர்த்தும் தேமுதிக

Published On 2021-01-24 08:04 GMT   |   Update On 2021-01-24 08:04 GMT
அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவுக்கு திடீரென ஆதரவு தெரிவித்து பேசி இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை:

சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் மிகவும் தீவிமாக உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. சட்டசபை தேர்தலிலும் கூட்டணியில் நீடிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் இருந்தார். ஆனால் மக்கள் இந்த கூட்டணியை ஏற்கவில்லை.

அதற்கு முந்தைய தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.திக. 40 தொகுதிகளில் போட்டியிட்டு கணிசமான வெற்றியை பெற்றது.

விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அதுபோன்ற ஒரு வெற்றியை பெற தே.மு.தி.க. விரும்புகிறது.

அதற்கு ஏற்ற வகையில் தே.மு.தி.க. காய் நகர்த்தி வருகிறது. ‘‘இப்போது வரையில் அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம்.

தனித்து போட்யிட வேண்டும் என்பதே தே.மு.தி.க. தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. தேவைப்பட்டால் 3-வது அணிக்கு விஜயகாந்த் தலைமை தாங்குவார்’’ என்பது போன்ற கோ‌ஷங்களையும் தே.மு.தி.க. இதற்கு முன்பு எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் சசிகலா விவகாரத்திலும் தே.மு.தி.க. மூக்கை நுழைத்துள்ளது. அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் சசிகலாவை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், கூட்டணி கட்சியான தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவரால் அரசியலில் உருவாக்கப்பட்டவர்களே தற்போது எதிர்ப்பது வருத்தமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

பிரேமலதாவின் இந்த பேச்சு கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றே அரசியல் பிரமுகர்கள் கணித்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் இதுபோன்ற கருத்துக்கள் மூலமாக கூடுதல் இடங்களை கேட்டுபெற முடியும் என்பது தே.மு.தி.க.வின் நம்பிக்கையாக இருக்கலாம் என்றே அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

Tags:    

Similar News