செய்திகள்
உத்தர பிரதேசத்தில் வேன் மீது லாரி மோதல்- 9 பேர் பலி
உத்தர பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர்.
ஹாபூர்:
உத்தர பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் தவுலானா பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர், நேற்று இரவு வேனில் மீரட் நோக்கி புறப்பட்டனர். இந்த வேன் புலந்த்ஷாகர் சாலையில் சித்திக்பூர் கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்தில் 9 பேர் உயிரிழந்ததற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.