புதுவையில் அரசு நிலத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கிடையாது- கவர்னர் கிரண்பேடி
புதுச்சேரி:
மறைந்த தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு புதுவையில் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
கருணாநிதிக்கு சிலை அமைக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டி சிலை அமையும் இடம், சிலை வடிவமைப்பு ஆகியவை குறித்து கூடி முடிவு செய்யும். ஆனால், இந்த கமிட்டியின் கூட்டம் இதுவரை நடை பெறவில்லை.
இந்த நிலையில் புதுவை கவர்னர் கிரண்பேடி அரசு நிலத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கிடையாது என்று அறிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பொது இடங்களில் சிலை அமைக்க தடை விதித்துள்ளதை சுட்டிக் காட்டி இதனை அவர் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தலைமை செயலாளர்கள் கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக புகார் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் லோதா, முகோபாத்யாயா ஆகியோர் கொண்ட பெஞ்சு அளித்த தீர்ப்பில் அரசுக்கு சொந்தமான பொது இடத்தில் சிலைகள் வைப்பதோ, மதம் சம்பந்தமான கட்டுமானங்கள் செய்வதோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
அந்த தீர்ப்பை புதுவை மாநில தலைமை செயலாளர் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
தனியார் நிலத்தில் மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.