செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13 ஆயிரத்து 477 கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-10-22 05:07 GMT   |   Update On 2021-10-22 05:07 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
சேலம்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்கிடையே காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று 11 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 14 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவிகளில் குளிக்க அனுமதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 10 ஆயிரத்து 559 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 13 ஆயிரத்து 477 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீரும், கால்வாயில் 550 கன அடியும் என மொத்தம் 650 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 94.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 95.10 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News