செய்திகள்
நிரம்பி வழியும் நீர்நிலைகள்-அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அமராவதி அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதியில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மட்டுமல்லாது பாசனப்பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இதனால் அனைத்து நீராதாரங்களும் நிரம்பி வருகின்றன. மழை நீர் ஓடைகளில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அமராவதி அணை நிரம்பி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. மொத்தமுள்ள 90 அடியில் 87.50 அடி நீர்மட்டம் உள்ளது.அணைக்கு வினாடிக்கு 1,614 கன அடி நீர் வரத்தும், அணையிலிருந்து வினாடிக்கு 1,575 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அமராவதி ஆற்றில் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் பொதுப்பணித்துறை சார்பில் வழியோர கிராமங்களுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் உடுமலை ஏழுகுள பாசன திட்ட குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.