செய்திகள்
ராகுல்காந்தி

4 தென் மாவட்டங்களில் ராகுல்காந்தி பிரசாரம்

Published On 2021-02-19 09:35 GMT   |   Update On 2021-02-19 09:35 GMT
வருகிற 27-ந் தேதி முதல் 4 தென் மாவட்டங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்கிறார். முதல் பிரசாரத்தை தூத்துக்குடியில் இருந்து தொடங்குகிறார்.
சென்னை:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் ‘ராகுலின் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் கடந்த மாதம் பிரசாரத்தை தொடங்கினார்.

முதல்கட்டமாக கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் ‘ரோடு ஷோ’ மற்றும் கூட்டங்களில் பேசி காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினார்.

இரண்டாம் கட்டமாக சில தினங்களுக்கு முன்பு புதுவை மாநிலம் சென்று பிரசாரம் செய்தார்.

3-ம் கட்டமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று பின்னர் விருதுநகரில் இருந்து அவர் பிரசாரத்தை தொடங்குவதாக இருந்தது.

ஆனால் பயண தூரம் அதிகமாக இருப்பதால் இந்த சுற்றுப்பயணத்தில் விருதுநகர் மாவட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.

வருகிற 27-ந் தேதி காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்கிறார். அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.

மறுநாள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

மார்ச் 1-ந்தேதி கன்னியாகுமரி செல்கிறார். அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்புகிறார்.

ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் 4 மாவட்டங்களிலும் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ரோடு ஷோ, பொதுக்கூட்டம், பொதுமக்களுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை அவர் ஆய்வு செய்கிறார்.

Tags:    

Similar News