செய்திகள்
மதுபாட்டில்கள் கடத்திய டாஸ்மாக் விற்பனையாளர் சஸ்பெண்டு
திருப்பூர் அருகே காரில் மதுபாட்டில்கள் கடத்திய டாஸ்மாக் விற்பனையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
தாராபுரம்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 10-ந்தேதி முதல் தமிழகஅரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதில் டாஸ்மாக் கடை-பார்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் குமரலிங்கம் பகுதியில் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது காரில் 409 மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், காரில் வந்தவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் மடத்துக்குளம் டாஸ்மாக் விற்பனையாளர் செந்தில் என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன், மடத்துக்குளம் டாஸ்மாக் விற்பனையாளர் செந்திலை சஸ்பெண்டுசெய்து உத்தரவிட்டார்.