செய்திகள்
ராஜாக்கமங்கலம் அருகே ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
ராஜாக்கமங்கலம் அருகே தனியார் பள்ளி ஆசிரியையிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜாக்கமங்கலம்:
கருங்கல் அருகே பாலப்பள்ளம் வெள்ளியாவிளை பகுதியை சேர்ந்த ராஜேஷ் மனைவி பரிமளா ஹெலன் (வயது 48). இவர் ஈத்தாமொழி அருகே தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் ராஜாக்கமங்கலம் அருகே கடந்த ஜனவரி மாதம் 23 கிராம் தங்க சங்கிலியை 2 பேர் பறித்து சென்றனர்.
இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜித் (26) என்பவரை குளச்சல் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்து விசாரித்தனர். அப்போது அஜித், மாதவலாயம் அனந்த பத்மநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (26) என்பவருடன் சேர்ந்து ஆசிரியை பரிமளா ஹெலனிடம் சங்கிலி பறித்ததும் தெரிய வந்தது. அப்போதிருந்து பிரகாஷ் தலைமறைவானார்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் காட்டுப்புதூர் பகுதியில் பதுங்கியிருந்த பிரகாஷை கைது செய்தனர். ஆசிரியை மட்டுமல்லாமல் இன்னொருவரிடமும் வழிப்பறி செய்தது தெரியவந்தது. இரு சம்பவங்களிலும் 33 கிராம் தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.