செய்திகள்
விபத்தில் பலியான நடேசன், மனைவி விஜயலட்சுமி.

பரமத்திவேலூர் அருகே வாகனம் மோதி கணவன், மனைவி பலி

Published On 2021-02-21 17:37 GMT   |   Update On 2021-02-21 17:37 GMT
பரமத்திவேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக இறந்தனர்.
பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் ‌நடேசன் (வயது 49), விவசாயி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (40). இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் ‌பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில் பங்கேற்க சிறப்பு பயிற்சி பெற்று வந்தார்.இவர்கள் குடும்பத்துடன்‌‌ பரமத்தியில்‌ உள்ள ஒரு ‌வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் விஜயலட்சுமி மதுரையில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு செல்வதற்காக நேற்று அதிகாலையில் புறப்பட்டார்.

மனைவி விஜயலட்சுமியை தனது மோட்டார் சைக்கிளில் நடேசன் கீரம்பூர் டோல்கேட்டுக்கு பஸ் ஏற்றி விட அழைத்து சென்றார். பரமத்தி அருகே உள்ள ஓவியம்பாளையம் திருமணிமுத்தாறு பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் தம்பதி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நடேசனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நடேசன் உயிரிழந்தார். விபத்தில் இறந்த நடேசன் மற்றும் விஜயலட்சுமி தம்பதிக்கு கார்த்திகேயன் (19) என்ற மகனும், லாவண்யா (17) என்ற ஒரு மகளும் உள்ளனர். பெற்றோரை ஒரு சேர இழந்த அவர்கள், பெற்றோரின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. தம்பதியினர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News