செய்திகள்
ஹத்ராஸ் வழக்கு -பல்வேறு கேள்விகளை முன்வைத்து சாட்சி விக்ரமிடம் சிபிஐ விசாரணை
உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் பெண் பாலியல் கொலை வழக்கில் சாட்சியாக இருக்கும் விக்ரமிடம் சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது.
ஹத்ராஸ்:
உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் 15 பேர் கொண்ட சிபிஐ குழு, ஹத்ராஸ் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளது. சம்பவம் நடந்த வயல்வெளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் நடந்த செப்டம்பர் 14ம் தேதி அந்த பகுதிக்கு முதலில் சென்று பார்த்த 2 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டனர்.
பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது, பெண்ணின் அருகில் அவரது தாயாரும் சகோதரரும் நின்றிருந்ததாக முக்கிய சாட்சியான விக்ரம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர்.