ஆன்மிகம்
வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களை படத்தில் காணலாம்.

11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-03-02 07:17 GMT   |   Update On 2021-03-02 07:17 GMT
வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவையை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி ஆகிய நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

அவர்கள் மலையடிவாரத்தில் இருந்து மூங்கில் தடி உதவியுடன் செங்குத்தான 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புவாக எழுந்தருளி உள்ள சிவலிங்கத்தை வழிபடுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மார்ச் மாதம் 19-ந் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால், வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக இருட்டுப் பள்ளம் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது நேற்று முதல் வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங் கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது என்றும், மலையேறும் வழியில் பழங்குடியினர் 40 கடைகள் அமைக்க அனுமதி அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நேற்று காலை காலை முதலே வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் மூங்கில் தடியுடன் மலையேறினர். 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளியங்கிரி மலையேற அனுமதி அளிக்கப்பட்டதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News