செய்திகள்
நில அதிர்வு பீதியால் வீடுகளில் இருந்து வெளியே வந்த கிராம மக்கள்

குடியாத்தம் அருகே கிராம பகுதியில் ஒரே இரவில் 7 முறை நில அதிர்வு- பொதுமக்கள் பீதி

Published On 2021-11-29 05:49 GMT   |   Update On 2021-11-29 07:13 GMT
ஒரேநாள் இரவில் 7 தடவை நில அதிர்வு ஏற்பட்டதால் இரவு நேரம் என்றாலே பயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி வரையில் இன்று அதிகாலை 4.17 மணி முதல் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

வேலூரில் இருந்து 59 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6-ஆக பதிவாகியுள்ளது.

ஏற்கனவே பலமுறை வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் துவங்கி திருப்பத்தூர் வரையில் பூமத்திய ரேகை நேர்கோடு என்பதால் இப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதாக கூறுகின்றனர்.



குடியாத்தம், தட்டப்பாறை மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவில் 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

அப்போது வீட்டின் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள் சில அடி தூரம் நகர்ந்துள்ளது. கட்டில்கள் சில அங்குலங்கள் நகர்ந்துள்ளது.

கால்நடைகள் தொடர்ந்து கத்தியபடி இருந்தன. மின்விசிறிகள் தாறுமாறாக சுழன்றது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

சில நிமிடங்களுக்கு பின் நில அதிர்வு நின்றது சில வினாடிகளுக்குப் பின் மீண்டும் மீண்டும் என 7 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

இதில் 2 முறை சுமார் 3 வினாடிகள் வரை நில அதிர்வு நீடித்தது. அப்போது பயங்கர சத்தம் ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

40 நாட்களில் 3-வது முறையாக நில அதிர்வு கண்டதால் கிராம மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்:-

குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லைமேடு கிராம பகுதியில் கடந்த மாதம் 19-ந்தேதி 25-ந்தேதி ஆகிய 2 நாட்களில் இரவில் திடீர் என சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டது. இன்று 7 முறை அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்த் துறையினரும், அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் இப்பகுதியில் நில அதிர்வு பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளதா என ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அதிகாரிகள் அச்சத்தை போக்க வேண்டும்.

ஒரே வாரத்தில் 2 முறை அதிலும் ஒரேநாள் இரவில் 7 தடவை நில அதிர்வு ஏற்பட்டதால் இரவு நேரம் என்றாலே பயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பெத்த திப்பபள்ளி அடுத்த சானுமா குலப்பள்ளி, பட்ட வான்ல பள்ளி ஆகிய கிராமங்களில் தொடர்ந்து 2 நாட்கள் நிலநடுக்கமும், பூமியில் இருந்து அதிக அளவு சத்தமும் ஏற்பட்டது.

இதேபோல் தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் படியுங்கள்...அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது: பிரதமர் மோடி
Tags:    

Similar News