செய்திகள்
அரசு போக்குவரத்து கூட்டமைப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் நேற்று காலை திருப்பூர் காங்கேயம் ரோட்டில் அரசு பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்:
அரசு போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் நேற்று காலை திருப்பூர் காங்கேயம் ரோட்டில் அரசு பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. சார்பில் சுப்பிரமணி தலைமை தாங்கினார். தொ.மு.ச. சார்பில் தங்கவேலு, ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் குமரேசன், ஐ.என்.டி.யு.சி. சார்பில் சண்முகசுந்தரம், பணியாளர் சம்மேளனத்தின் சார்பில் பொன்னுசாமி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
அரசு பேருந்தை தனியார் வாடகைக்கு எடுக்கும் முறையை புகுத்தக் கூடாது. போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும். தொழிலாளர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட விடுப்பு மற்றும் பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.