செய்திகள்
திருச்சி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருச்சி அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைக்கோட்டை:
திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி தலைமையிலான போலீசார் நேற்று சிந்தாமணி அண்ணாசிலை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர், ராம்ஜி நகர் காந்திநகர் பகுதியை சேர்ந்த தர்மேந்திரன் (வயது 43) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா, ரூ.130 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுபோல், தாரநல்லூர் சுகாதார வளாகம் அருகில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்த ஆனந்தனை(45) காந்திமார்க்கெட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.