செய்திகள்
சிபிஐ

வங்கிகளில் 7 ஆயிரம் கோடி மோசடி - 169 இடங்களில் சிபிஐ சோதனை

Published On 2019-11-05 08:27 GMT   |   Update On 2019-11-05 08:27 GMT
வங்கி முறைகேடுகள் தொடர்பாக இன்று 15 மாநிலங்களில் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  • இந்தியா முழுவதும் வங்கிகளில் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி
  • நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
  • மோசடியில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டம்

சென்னை:

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் பல இடங்களில் சோதனை நடைபெற்றது.

வங்கிகளில் கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

தமிழகத்திலும் இந்த முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் 35 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வங்கிகளில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி மற்றும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.



இது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டினர். இதை வைத்து அடுத்தகட்ட விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கினர்.

இதன்படி இன்று நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். டெல்லி, குஜராத், அரியானா, சண்டிகர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

டெல்லியில் இருந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் செயல்படும் சி.பி.ஐ. அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.

வங்கிகளில் பணியாற்றும் முறைகேடுகளில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தெந்த பகுதிகளில் சோதனை நடைபெற்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் சி.பி.ஐ. தரப்பில் வெளியிடப்படவில்லை.

சென்னையிலும் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த பகுதியில் யாருடைய வீட்டில் சோதனை நடைபெற்றது என்பது பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

இன்று நடைபெறும் இந்த சோதனை சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை நடத்திய சோதனைகளிலேயே மிகப்பெரிய சோதனையாக கருதப்படுகிறது. இந்த சோதனையின்போது வங்கி மோசடி தொடர்பாக பல்வேறு ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் மோசடியில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த சோதனை தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் இன்று மாலை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது எந்தெந்த இடங்களில் சோதனை நடைபெற்றது, மோசடியில் ஈடுபட்ட வங்கிகள் எவை என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.


Tags:    

Similar News