செய்திகள்
அரூர் அருகே விவசாயி வீட்டில் 5 பவுன் நகை, பணம் திருட்டு
அரூர் அருகே விவசாயி வீட்டில் 5 பவுன் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:
அரூர் அருகே கோட்டப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 64). விவசாயி. இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் ஆவலூர் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள நெற்பயிரை அறுவடை செய்ய சென்றார். பின்னர் அவர்கள் அங்குள்ள கொட்டகையில் தங்கினர். இந்தநிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு கிருஷ்ணனின் இளையமகன் பிரபு கோட்டப்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணன் கோட்டப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.