உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

திருநாவுக்கரசுக்கு ‘தந்தை பெரியார் விருது’- மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2022-01-13 09:36 GMT   |   Update On 2022-01-13 09:36 GMT
2021-ம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது’’ சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் கே.சந்துருக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை’’ வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், 2021-ம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது’’ திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

அதே போன்று, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் “டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது’’ வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், 2021-ம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது’’ சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் கே.சந்துருக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், இவ்விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரு லட்சம் ரூபாய் என்பதை இவ்வாண்டு முதல் ரூபாய் ஐந்து லட்சமாக உயர்த்திட முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இவ்விருதுகள், விருதுத்தொகையுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையுடன் வழங்கப்படும். வருகிற 15.1.2022 (சனிக்கிழமை), திருவள்ளுவர் தினத்தன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விருதுகளை வழங்குவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News