மதுரையை கலக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது
மதுரை:
மதுரை மாநகரில் வழிப்பறி கொள்ளை தொடர்கதையாக அரங்கேறி வருகிறது. தல்லாகுளம் சர்வேயர் காலனி பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
கூடல்புதூர் சிலையநேரி ஆணையூர் மெயின் ரோடு பகுதியில் பெண் ஒருவரிடம் 6 பவுன் தாலி செயினை பறிக்கப்பட்டது. கூடல் புதூர் தபால் தந்தி நகர் மல்லிகை தெருவில் பெண் ஒருவரிடம் 9 பவுன் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது. கூடல்புதூர் விளாங்குடி விவேகானந்தர் தெருவில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் பெண் ஒருவரிடம் 9 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர்
இது தொடர்பாக மதுரை மாநகர தீவிர குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த நிலையில் திருப்பாலை மற்றும் மாட்டுத் தாவணி ஆகிய பகுதிகளில் போலீசார் சனிக்கிழமை இரவு வாகன தணிக்கை சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
எனவே சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரிடமும் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்த 22 பவுன் தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிர்ச்சி அடைந்த போலீசார் மேற்கண்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் லாடனேந்தல் மந்தை தெருவை சேர்ந்த அம்பலம் மகன் ராஜசேகர் (வயது 20), லாடனேந்தல் தெற்குதெரு வீரபாண்டி மகன் சித்திக் அலி (22), கடச்சநேந்தல் தண்ணீர் தொட்டி திருகுமரேசன் மகன் முருகானந்தம் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்
அவர்களிடமிருந்து 22 பவுன் தங்கச்சங்கிலியை பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது
இதனை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஜெயிலில் அடைத்தனர்.
மதுரை மாநகரை கலக்கிய 4 வழிப்பறி கொள்ளையர்கள் 22 பவுன் தங்கச் சங்கிலிகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.