சமூக விரோதிகளின் கூடாரமான அய்யலூர் சந்தை
வடமதுரை:
திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கென தனி சந்தை உள்ளது. பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தக்காளிகளை தினசரி மாலையில் கொண்டு வருகின்றனர். மேலும் வியாழக்கிழமை தோறும் ஆடு, கோழி மற்றும் காய்கறி சந்தை நடைபெறுகிறது.
மலை கிராமங்களில் இருந்து சீதாப்பழம், கண்வலிக்கிழங்கு, பளு பாகற்காய் உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர். திருச்சி, மணப்பாறை, நத்தம், துவரங்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இவற்றை கொள்முதல் செய்கின்றனர்.
ஆனால் சந்தையில் மின் விளக்குகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலையிலேயே விவசாயிகள் வருகின்றனர்.
மின் விளக்குகள் எரியாததால் கொள்ளையர் பயம் உள்ளது.
இரவு நேரங்களில் குடிமகன்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் சந்தை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே அதிகாரிகள் இந்த சந்தையை மீட்டெடுத்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றனர்.