வழிபாடு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டுள்ள காட்சி.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2022-01-08 05:44 GMT   |   Update On 2022-01-08 05:44 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேரோட்ட திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான தைத்தேர் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.15 மணி முதல் காலை 6.15 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. அப்போது முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவிஆணையர் கந்தசாமி, சுந்தர்பட்டர் ஆகியோர் தேரில் நட்டனர். இதில், கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தைத்தேர் திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரை வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெறும் என கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.
Tags:    

Similar News