செய்திகள்
போலீசார் விசாரணை

நாமக்கல் அருகே பெண் சிசுக்கொலை?- போலீசார் விசாரணை

Published On 2021-04-14 09:28 GMT   |   Update On 2021-04-14 09:28 GMT
நாமக்கல் அருகே பெண் சிசுக்கொலை நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எருமப்பட்டி:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்தவர் சூர்யா. இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கஸ்தூரி மீண்டும் கர்ப்பம் ஆனார். அவருக்கு கடந்த 4-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து கஸ்தூரி தனது குழந்தையுடன் தனது தாய் வீடான பொட்டிரெட்டி பட்டியில் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 12-ந் தேதி குழந்தை உடல் நிலை குறைவால் உயிரிழந்து விட்டதாக கூறி சடலத்தை அப்பகுதியிலேயே உறவினர்கள் புதைத்ததாக தெரிகிறது.

இதனிடையே குழந்தை இறப்பு குறித்து சந்தேகமடைந்த சுகாதார துறையினர் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் லலிதா எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து கஸ்தூரியின் தாய் வீடான பொட்டிரெட்டிபட்டியில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் பார்வையிட்டனர். தொடர்ந்து வருவாய் துறையினர் முன்னிலையில் சுகாதாரத்துறையினர், காவல் துறையினர் சடலத்தை தோண்டி எடுத்தனர். பின்பு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 3-வதாக பெண் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தையை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் எருமப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News