தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 76 கிலோ கஞ்சா பறிமுதல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக மஞ்சள், கடல் அட்டைகள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் படகு மூலமாக இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இதனை தடுக்க கடலோர காவல் படை மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை தூத்துக்குடி கீழ வைப்பார் கடற்கரை பகுதியில் ஒரு காரில் இருந்து மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தனர்.
அதனை மடக்கி கடலோர காவல் படையினர் சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த 2 பேர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர். அந்த மூட்டைகளில் 76 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
அதனை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர் குளத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் சென்னை பதிவு எண்ணை கொண்டிருந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடியவர்கள் யார்? எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டது என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.