செய்திகள்
காட்பாடி அருகே ஆடு திருடியவர் கைது
காட்பாடி அருகே ஆடு திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
காட்பாடி, புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 41). இவர் தனது வீட்டின் பின்புறம் 4 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு இருந்த ஆடுகளை 2 பேர் திருடி சென்றனர். அப்போது ஆட்டின் சத்தம் கேட்ட சரவணன் எழுந்து பார்த்து கூச்சலிட்டார். அப்போது 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை சரவணன் பிடித்து விருதம்பட்டு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர் லத்தேரி அருகே சோழமூர் கிராமத்தை சேர்ந்த குமார் (32) என்பவதும், தப்பி ஓடியவர் லத்தேரியை சேர்ந்த வைரமுத்து என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்து, தப்பியோடிய வைரமுத்துவை தேடி வருகின்றனர்.