செய்திகள்
கூத்தாநல்லூர் அருகே கணவரை தாக்கி பெண்ணிடம் நகை பறிப்பு
கூத்தாநல்லூர் அருகே கணவரை தாக்கி பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கூத்தாநல்லூர்:
திருவாரூரை அடுத்துள்ள வேளங்குடி பெரியார் தெருவைச்சேர்ந்தவர் பூபாண்டியன் (வயது 35). இவர் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் கடைவீதியில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். இந்த கடையில் பூபாண்டியனின் மனைவி நித்யாவும் (28) பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு கடையினை பூட்டி விட்டு பூபாண்டியன் தனது மனைவி நித்யாவை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு ஊருக்கு சென்றார். இவர்கள் வடபாதிமங்கலம்-மூலங்குடி சாலையில் சென்றபோது, புனவாசல் என்ற இடத்தில் எதிரே 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பூபாண்டியனை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு, நித்யா கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த பூபாண்டியன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசில் பூபாண்டியன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.