செய்திகள்
கொள்ளை

கோவை அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2021-10-19 17:51 GMT   |   Update On 2021-10-19 17:52 GMT
கோவை அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை கோவில்பாளையத்தை அடுத்த குரும்பப்பாளையம் சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சின்னப்பராஜ் (வயது 71). இவர் சர்ச்சியில் பாதிரியராக இருந்து வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 12 ¼ பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சின்னப்பராஜ் போலீசில் புகார் தெரிவித்தார். இதேபோன்று சின்னப்பராஜின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தாயுமானசாமி (47). இவரும் அதே நாளில் வீட்டை பூட்டி விட்டு சொந்த பணியின் காரணமாக மதுரை சென்றார்.

பின்னர் இவரும் வீடு திரும்பிய போது இவரது வீட்டின் முன்பக்க கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த 2 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்தும் தாயுமானசாமி போலீசில் புகார் தெரிவித்தார்.

Tags:    

Similar News