பெண்கள் உலகம்
பெண்களுக்கான மத்திய, மாநில அரசுத் திட்டங்கள்...

பெண்களுக்கான மத்திய, மாநில அரசுத் திட்டங்கள்...

Published On 2022-02-05 03:31 GMT   |   Update On 2022-02-05 06:16 GMT
பணிபுரியும் மகளிர் விடுதித் திட்டத்திற்கான விவரங்களை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
பெண்கள் முன்னேறும்போது, நாடு பல மடங்கு முன்னேற்றம் அடையும். இதைக்கருத்தில் கொண்டே மத்திய, மாநில அரசுகள் பெண்களுக்காக பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இவற்றை பயன்படுத்திக்கொண்டு முன்னேற்ற பாதையில் நடை போடலாம். அந்தத் திட்டங்களின் தொகுப்பு இதோ:

பெண்கள் பாதுகாப்பு

பெண் சிசுக் கொலையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது ‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ திட்டம். இது இளம் பெண்களுக்கான சேவைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் போன்றவை இணைந்து நடத்தும் ஒரு கூட்டு முயற்சியே இந்தத் திட்டம்.

பணிபுரியும் பெண்கள் விடுதிகள் சிறப்புத் திட்டம்

பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடங்கள் கிடைப்பதை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். நகர்ப்புறம்,  பெருநகரங்கள், பெண்கள் வேலை செய்வதற்கு வாய்ப்புள்ள கிராமப்புறங்கள் வரை இந்தத் திட்டம் செயல்படுகிறது. பணிபுரியும் பெண்களின் குழந்தைகளுக்கான தினப் பராமரிப்பு வசதியையும் இவ்வகை விடுதிகள் கொண்டுள்ளன.

பணிபுரியும் மகளிர் விடுதித் திட்டத்திற்கான விவரங்களை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

சகி திட்டம்

‘நிர்பயா' நிதியின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்குமிடம், காவல்துறை, சட்டம், மருத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 24 மணி நேர சேவை வசதியோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா உதவி எண் 181.

தொழில் முனைவோர் அபிவிருத்தித் திட்டம்

புதிதாகத் தொழில் செய்வதற்கு விருப்பமுள்ளவர்களுக்கு, ‘தொழில் முனைவோர் அபிவிருத்தித் திட்டம்' ஏற்றதாக இருக்கும். 21 முதல் 45 வயது வரையுள்ள பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். இதில் 50 சதவிகிதம் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கடன் தொகையாக ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வழங்கப்படுகிறது.

எஸ்.எம்.இ மகிளா பிளஸ்

சிறிய அளவில் தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்காக  ‘எஸ்.எம்.இ மகிளா பிளஸ்’ என்கிற சிறப்புத் திட்டத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அளிக்கிறது.

இந்தத் திட்டத்தில் உற்பத்தித் துறைக்கு ரூ.2 கோடி ரூபாயும், சேவைத் துறைக்கு ரூ.1 கோடி வரையிலும் கடன் தரப்படுகிறது. இதில் ரூ.1 கோடி வரை பிணையம் கேட்கப்படுவதில்லை. இந்த ரூ.1 கோடிக்கு குறு மற்றும் சிறு நிறுவனங்கள் கடன் உத்தரவாத நிதிக்கு அறக்கட்டளை பொறுப்பேற்றுக் கொள்கிறது.

மகிளா இ-ஹாட்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட நேரடி ஆன்லைன் மார்க்கெட்டிங் தளம் இது. இந்தத் திட்டம் பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டது. இதுவும் ‘டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
Tags:    

Similar News