தொழில்நுட்பம்
ஆப்பிள்

உற்பத்தி குறைபாடு காரணமாக 2020 5ஜி ஐபோன்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல்

Published On 2020-03-28 11:06 GMT   |   Update On 2020-03-28 11:06 GMT
2020 5ஜி ஐபோன் மாடல்களின் உற்பத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால், இவற்றின் வெளியீடு மாதக்கணக்கில் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.



கொரோனா வைரஸ் பாதிப்பு காரணம் ஆப்பிள் நிறுவனத்தையும் பாதித்து இருக்கிறது. இதனால் 2020 5ஜி ஐபோன் மாடல்கள் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதிய மொபைல்  போன்கள் குறிப்பாக ஐபோன் மாடல்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு விருப்பம் குறைந்து இருக்கும் என்பதே புதிய ஐபோன் வெளியீடு தாமதமாக மற்றொரு காரணம் என கூறப்படுகிறது. இதுதவிர தற்போதைய பொருளாதார நெருக்கடியும் இதற்கு காரணமாக கூறலாம்.

சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்களின் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. வெளியீடு ஏற்கனவே தாமதமாகி விட்டதால், தனது 5ஜி ஐபோன் அதிக பிரபலமாக ஆப்பிள் விரும்பும் என தெரிகிறது.

எனினும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய ஐபோன் வாங்குவதற்கான விருப்பம் குறைந்து இருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.



இதுதவிர ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வழங்கும் நிறுவனங்களும் பணிகளை கணிசமான அளவு நிறுத்தி இருக்கின்றன. சீனாவில் நிலைமை மெல்ல சீரடைந்து வருகிறது என்ற போதும், உற்பத்தி ஆலைகள் இன்னமும் முழுவீச்சில் செயல்பட துவங்கவில்லை.

புதிய ஐபோனிற்கான பொறியியல் பிரிவின் பணிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பயண தடைகளால் தாமதமாகி இருக்கின்றன. இது நிலைமையை மேலும் மோசமடைய வைத்திருக்கின்றன.

உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் பாகங்களை ஆகஸ்ட் மாத வாக்கில் வழங்குவதாக தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக இவை ஜூன் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய சூழ்நிலையில், 5ஜி ஐபோன் வெளியீடு தாமதமாகி இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கும் நிலையில், இதுபற்றிய மற்ற விவரங்கள் தெளிவற்றதாகவே இருக்கின்றன. 
Tags:    

Similar News