செய்திகள்
வெள்ளகோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது
வெள்ளகோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பையை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி திலகவதி (வயது 55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நாகராஜ் இறந்து விட்டதால், திலகவதி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு திலகவதி நூறுநாள் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திலகவதி வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்து இருந்த 7 பவுன்நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசில் திலகவதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகவதி வீட்டில் திருடியஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் வெள்ளகோவிலில், காமராஜபுரம் விநாயகர் கோவில் முன்பு நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி தெற்கு தெருவை சேர்ந்த திவாகர் (25) என்பது தெரிய வந்தது. திலகவதி வீட்டில், இவர் உள்பட 4 பேர் சேர்ந்து திருடியது தெரியவந்தது.
இதையடுத்து திவாகரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 பவுன்நகையை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.