செய்திகள்
இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அபார வெற்றி வழங்கிய மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி
நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய பிரதேசம் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பெரும்பாலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:
மத்திய பிரதேச மக்கள் மாநிலத்தில் நிலையான, வலுவான அரசை தேர்வு செய்துள்ளனர். பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. ம.பி.யில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசின் வளர்ச்சிப் பயணம் இன்னும் வேகம் எடுக்கும்.
உத்தர பிரதேசம் மாநில இடைத்தேர்தலில் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. உ.பி. அரசின் முயற்சிகளுக்கு இடைத்தேர்தல் முடிவுகள் அதிக உத்வேகத்தை அளிக்கும். யோகி ஆதித்யநாத் அரசு மாநில வளர்ச்சியில் புதிய உயரங்களைத் தொடும்.
இதேபோல், தெலுங்கானா மாநிலம் துபாக்கா மற்றும் கர்நாடக மாநிலம் ஷிரா, ராஜராஜேஸ்வரா நகரில் பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதற்காக பாஜகவினர் கடுமையாக உழைத்தனர். வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் அவர்கள் நல்லபடியாக கொண்டு சேர்த்தனர்.
குஜராத் மாநிலத்துடனான பாஜகவின் பிணைப்பு பிரிக்க முடியாதது. இடைத்தேர்தலில் 8 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு என் நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.