செய்திகள்
விபத்திற்குள்ளான காரை காணலாம்

தியாகதுருகம் அருகே டிராக்டர் மீது கார் மோதல்- காங்கிரஸ் வேட்பாளர் உள்பட 4 பேர் படுகாயம்

Published On 2021-04-05 03:25 GMT   |   Update On 2021-04-05 03:25 GMT
தியாகதுருகம் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கண்டாச்சிமங்கலம்:

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் மணிரத்தினம் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். உடன் அவரது மகன் அரவிந்தன்(வயது 28), கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வேட்பாளரின் உதவியாளர் திருநாவுக்கரசு(44) ஆகியோரும் இருந்தனர். கடலூர் மாவட்டம் கரிக்கா நகர் பகுதியைச் சேர்ந்த கவுதம்(30) என்பவர் காரை ஒட்டினார்.

தியாகதுருகம் சின்னமாம்பட்டு பிரிவு சாலை அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. இதில் வேட்பாளர் மணிரத்தினம், அவரது மகன் அரவிந்தன், உதவியாளர் திருநாவுக்கரசு, டிரைவர் கவுதம் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து குறித்து அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் டிரைவர் கவுதம் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் நாளை(செவ்வாய்கிழமை) நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் மணிரத்தினம் விபத்தில் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News