செய்திகள்
வைகையில் திடீர் வெள்ளப்பெருக்கு- 8 ஊராட்சிகளுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை
வைகையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 8 ஊராட்சிகளுக்கு இன்று தண்டோரா மூலம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மூலவையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியை நெருங்கி உள்ளது.
இதேநிலை நீடித்தால் ஓரிருநாளில் அணை முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மூலவைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தும்மக்குண்டு, சிங்கராஜபுரம், முருக்கோடை, வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட 8 ஊராட்சிகளுக்கு இன்று தண்டோரா மூலம் வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.