ஆன்மிகம்
யானை மீது வைத்தபடியும், தலையில் சுமந்தபடியும் பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்துச் சென்றபோது எடுத்த படம்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடங்கியது

Published On 2021-03-08 09:11 GMT   |   Update On 2021-03-08 09:11 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதையொட்டி யானை மீது பூத்தட்டு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஸ்ரீரங்கம் கோவிலின் மூலவரை போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும். அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறார் என்பதற்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன.

இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும். எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார். மும்மூர்த்திகளை நோக்கி, அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை விக்னேஷ்வரபூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. தொடர்ந்து காலை 6.40 மணிக்கு கொடிமரத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது கோவில் குருக்கள் அமர்ந்து பூக்களை கொண்டு வந்தார். தேரோடும் வீதி வழியாக வலம் வந்து கோவிலை சென்றடைந்தது.

அதைத்தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பாக இணைஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் பூத்தட்டுகளை சுமந்து 7.10 மணிக்கு கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டு 7.15 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பூக்கள் சாத்தப்பட்டு பூச்சொரிதல் விழா தொடங்கியது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல்தான் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மருதூர், மாகாளிக்குடி, வீ.துறையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் பூக்களை சுமந்து வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.

மேலும் நேற்று சிறுகனூர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்து இருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர். மேலும் விழாவையொட்டி பல்வேறு அமைப்புகளின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்களின் வசதிக்காக ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பாக செயல் அலுவலர் பாலமுருகன் உத்தரவின் பேரில் கொள்ளிடம் நம்பர் 1 கொள்ளிடம் டோல்கேட்டில் இருந்து சமயபுரம் வரை 50 நகரும் தற்காலிக கழிவறைகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் வசதியும், ஆட்டுச்சந்தை, சக்திநகர், உள்ளிட்ட இடங்களில் 400 மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். மேலும் மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 3 இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களை ஒழுங்குபடுத்த பணியிலும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் திருச்சி போலீஸ் ஐ.ஜி. ஜெயராமன் உத்தரவின்படி, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பாா்வையில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்பட திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News