செய்திகள்
டெல்லி தீ விபத்து - கட்டிட உரிமையாளர், மேலாளருக்கு 14 நாள் போலீஸ் காவல்
டெல்லியில் அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தி 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர், மேலாளருக்கு 14 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் அனாஜ் தானிய மண்டி பகுதியில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 43 பேர் பலியாகினர்.
அனுமதியின்றி வீட்டில் நடத்தப்பட்ட ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் கார்பன் மோனாக்சைட் என்ற கொடிய நச்சுவாயு தாக்கி இறந்ததாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த கட்டிடத்துக்கு டெல்லி தீயணைப்பு துறையினரிடமிருந்து தடையின்மை சான்றிதழ் பெறப்படவில்லை என தெரியவந்துள்ள நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லி அரசின் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்தது. இதுபற்றிய நீதி விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டு, ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறியது.
இதற்கிடையே, அனுமதியின்றி வீட்டில் தொழிற்சாலை நடத்தி 43 உயிரிழப்புகளுக்கு காரணமான கட்டிட உரிமையாளர் ரேஹான் என்பவரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கட்டிட உரிமையாளர் ரேஹான் மற்றும் மேலாளர் பர்கான் ஆகியோர் தீஸ் ஹஜாரி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள 14 நாட்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டது.