செய்திகள்
பவானிபூர் இடைத்தேர்தல் முடிவை யாராலும் கணிக்க முடியாது -பாஜக தலைவர் கருத்து
பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரியங்கா, நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
பவானிபூர்:
மேற்கு வங்காள மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்த மம்தா, இந்த தொகுதியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
மம்தாவை எதிர்த்து, பாஜக சார்பில் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜிக்கு இந்த தேர்தலில் கடும் சவால் அளிக்கும் வகையில், பாஜக சார்பில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பவானிபூர் தொகுதியில் பாஜக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியது. கட்யின் மாநில தலைவர் திலிப் கோஷ், வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் ஆகியோர், சுவரில் பாஜகவின் சின்னமான தாமரையை வரைந்தனர்.
அப்போது பேசிய திலிப் கோஷ், “மம்தா பானர்ஜி நந்திகிராமில் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அரசியலில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கு எதிரான போராட்டத்தை பிரியங்கா திப்ரேவால் வழிநடத்தினார்” என குறிப்பிட்டார்.
வேட்பாளர் பிரியங்கா கூறுகையில், “நான் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறேன். மேற்கு வங்காள மக்களின் வாழ்வுரிமையை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசால் பறிக்கப்படுகிறது. நான் வங்காள மக்களுக்காக போராடுகிறேன்” என்றார்.
இதையும் படியுங்கள்... கோழிக்கோடு விமான விபத்துக்கான காரணம் என்ன? - வெளியான அதிர்ச்சி தகவல்